Saturday, June 26, 2021

ஊனுக்குள் ஒளிந்த ஈசன்

 


சி்த்தர்கள் பதினெண் சித்தர்கள் என்றும், நவகோடி சித்தர்கள் என்றும் பலவகையான தொகுப்பாகக் காணப்படுகின்றனர். அவர்கள்அனைவருமே இந்தியாவில் பல இடங்களிலும் பரவலாக இருந்து ஆன்மீகத்தை வளர்த்து இருக்கிறார்கள். பொதுவாக பார்க்கும் போது சித்தர்கள் கடவுள் எதிர்ப்புக் கொள்கையை ஆதரிப்பவர்களைப் போல தோன்றுவது இயல்பு. இதற்கு உதாரணமாக ,

கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா   என்பதையும்

நட்டகல்லை சுற்றிவந்து நாலுபுட்பம் சாத்தியே

சுற்றிநின்று மொணன்று சொல்லுமந்திரம் ஏதடா

நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சட்டிசுட்ட சட்டுவம் கறிச்சுவை அறியுமோ  என்ற பாடலையும் சான்றாகக் காட்டுவார்கள்.

சித்தர்கள் போலிச் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் எதிர்த்தார்களேதவிர கடவுளை மறுக்கவில்லை. வெறும் கல்லில் மட்டுமே கடவுள் இருக்கிறார் என்று சொல்லி ஊரை ஏமாற்றும் போலிகளையே அவர்கள் சாடினார்கள். மக்களுக்கு நல்லறிவை புகட்டினார்கள். உண்மையான தெய்வம் மனத்தில் இருக்கிறது என்றுஉபதேசம் செய்தார்கள். 

“தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?

வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!

தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்

ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!

இவ்வுடம்பு வெறுத்து ஒதுக்கத்தக்க ஒரு பொருள் என்று முதலில் தாம் எண்ணியதாகவும் பின்பு உடம்புக்குள்ளே தன்னை உயர்நிலைக்கு உயர்த்தும் பரம் பொருளைக் கண்டு கொண்டேன்.அதன் பிறகு தான் தம் உடம்பைப் பேணிக் காப்பதாகவும்  திருமூலர் குறிப்பிடுகிறார்.

தேனுக்குள் இருக்கின்ற இனிப்பு, சிவப்பு நிறமா அல்லது கருப்பு நிறமா என்ற ஆராய்ச்சி  பயன் அற்றதோ அதனைப் போன்றதே இறைவனைப் புற உலகப் பொருட்களில் தேடுவதாகும். தேனுக்குள் இருக்கின்ற இன்பம் செறிவுற்று இருப்பதனை அதனை அருந்தியவர்களால் மட்டுமே அறிய முடியும்.

அது போன்று உடம்பினுக்குள்ளே உயிரில் கலந்திருக்கின்ற இறைவனை நுகர்ச்சியினாலேயே உணர முடியும் என்பதனைத், “தேனுக்குள் இன்பம் சிவப்போ கருப்போ, பாருக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர், தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல், ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே என்று தெரிவிக்கிறார் திருமூலர்.

நான்முகனும் நாராயணனும் தங்கள் முற்சியால் இறைவனைத் தேடிக் கண்டுவிட முடியும் என்று முன்னொரு காலத்தில் பலயுகங்கள் முயன்று தோல்வியுற்றனர். எனினும் அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையான அப்பெருமானை என் அன்பினால் என் உடலுக்குள்ளே தேடிக்கண்டேன் என்பதனைத்,

 “தேடிக்கண்டு கொண்டேன் திருமாலொடு நான்முகனும் தேடி தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன்

என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுகின்றார்.  இறைவனை வெளியே தேடாதே, உள்ளே தேடு என்று இதைத்தான் நமது சித்தர்களும் சற்று கடினமான வார்த்தைகளில் குறிப்பிட்டனர். பதினெண் சித்தர்களில் பெரும்பாலோர்  பிரசித்தி பெற்ற கோயில்களில் சமாதி கொண்டிருக்கிறார்கள். சில சித்தர்கள் சிவத்துடனே இரண்டறக் கலந்து அந்தக் கோயில்களில் அருள்பாலித்து வருகிறார்கள். சில சித்தர்கள் தனித்தனியாக ஜீவசமாதிகளில் தரிசனம் தருகிறார்கள்.

1 comment:

  1. மிகவும் அருமை ... சிவவாக்கியர் பாடல்கள் யாவுமே தத்துவங்கள் நிறைந்தவை . சிவ விஷ்ணு பேதம் இல்லாமல் பாடியவர்

    ReplyDelete