நான் எழுதி பாபா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருக்கும் பெரிய புராண நூலின் முன்னுரையில் சிறுபகுதி.
பெரியபுராணம் என்று இந்தநூலுக்கு பெயர் ஏற்பட்டதற்குப் பல காரணங்கள்
உள்ளன. இதன் அருமை பெருமைகள் அளவுகடந்தது அதனால் இது பெரிய புராணம் எனப்பட்டது. இதில்
சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு நாயானாருடைய வாழ்க்கை சரிதமும் புராணம் என்ற பெயரோடு காணப்படுகிறது.
இவ்வாறு பல புராணங்களை பெற்ற காரணத்தினாலும் இது பெரிய புராணம் என்று போற்றப்படுகிறது.
அது மட்டும் அல்ல அன்பிலும், பக்தியிலும், தானம் கொடுப்பதிலும், சிவபூசைசெய்வதிலும்
பெரியவர்களான பல மகான்களுடைய சரித்திரத்தை சொல்கின்ற காரணத்தினாலும் இது பெரியபுராணம்
என்றுவழங்கப்படுகிறது.
மற்ற அனைவரும்
இறைவனிடம் உலகப்பொருட்களையும்,அழியக்கூடிய செல்வத்தையும் , ஞானமிகுந்த சிலர் மோட்சப்பேற்றையும்
கேட்பார்கள். ஆனால் பெரிய புராணத்தில் வரும் நாயன்மார்கள் இறைவனை கும்பிடுவதைத் தவிர
வீடு பேறான மோட்சத்தைக் கூட விரும்பாமல் இருந்திருக்கிறார்கள். இது ஆச்சரியமான உண்மை,
இதனை
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஒடும்செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினிற் கும்பிடலேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார் என்று
சேக்கிழாரே பாடிஇருப்பதன் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது.
இவ்வாறு இறைவனைத் தவிர வேறு எதையும் வேண்டாத பெரிய உள்ளம் கொண்டவர்களது சரித்திரத்தைச் சொல்வதாலும்
இதற்கு பெரிய புராணம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் இயற்றிய
திருத்தொண்டத்தொகையையும், நம்பியாண்டார் நம்பி பாடியருளிய திருத்தொண்டர் திருவந்தாதியையும்,
அடிப்படையாகக் கொண்டு சேக்கிழார் சுவாமிகள் இந்தப் பெரிய புராணத்தை மிகவும் விரிவாக
சொற்சுவை, பொருட்சுவை, எல்லாவற்றுக்கும் மேலாக பக்திச்சுவை சொட்டச்சொட்டப் பாடி கொடுத்திருக்கிறார்.
சிவபெருமானுடைய பேரருளைப் பெறுவதற்கு என்ன தகுதி தேவைப்படுகிறது
? மிகப்பெரிய செல்வந்தராக இருக்க வேண்டுமா ? வேதசாஸ்திரங்கள் படித்து அவற்றில் வல்லவராக
இருக்க வேண்டுமா ? உயர்பதவி வகிக்க வேண்டுமா ? மன்னராக இருந்தால் தான் மகேசன் அருள்
பெறமுடியுமா ? தாழ்ந்த குலத்தில் தோன்றாமல் உயர்குலத்தில் பிறக்க வேண்டுமா? இறைவனை சாஸ்திரங்கள் கூறும் முறைப்படிதான் வழிபடவேண்டுமா ? என்ற இது போன்ற இன்னும்
ஏராளமான கேள்விகளுக்கு பெரிய புராணம் இல்லை இல்லை இல்லவே இல்லை என்ற பதிலைத்தான் அளிக்கிறது.
முத்தீ வளர்த்து வேள்வி செய்த
அந்தணராகிய நீலநக்கர் முதலாக, சட்டி செய்து கொடுப்பதை தொழிலாகக் கொண்ட திருநீலகண்டர்
வரை எல்லாத் தொழில்களைச் செய்தவர்களுக்கும் பேதமில்லாமல் இறைவன் அருளை வாரி வழங்கி
இருக்கிறான்.
அந்தக் கால சமுதாயம் சாதிப்பிரிவினைகளினால்
துண்டாகிக் கிடந்தது. அப்படி பிளவுபட்ட மனிதகுலத்தை சிவபெருமான் மீது கொண்ட அளவற்ற
பக்தி என்ற கயிற்றின் மூலமாக இறுக்கக்கட்டிய
நடைமுறை வைத்தியத்தை பெரியபுராணம் மிக அருமையாக தெரிவிக்கிறது.
கழுத்தளவு நீரல் நின்று உருத்திர
ஜெபம் செய்து இறைவனது அருளைப் பெற்றவர் உருத்திரபசுபதியார். இது போல எந்தவொரு பூசை
ஜெபம் தவம் ஆகியவற்றை பெரிய அளவில் செய்யாமல், அப்பர்பெருமான் மீது அளவில்லாத பக்தி
கொண்டு ,அவரை நேரில் பார்க்காத போதிலும் ,அவர்
பெயரால் தண்ணீர்பந்தல் வைத்தும், தானதர்மங்கள் செய்தும் வழிபட்டஅப்பூதி அடிகள் போன்றவர்களும்
பெரிய புராணத்தில் உண்டு
மனித
குலத்திற்குத் தொண்டு செய்யும் மனிதர்களும், இறைவனுக்கு இணையாக தெய்வத்தன்மை பெற்ற
மனிதர்களும் போற்றி வழிபட வேண்டியவர்கள் என்பதை பெரியபுராணம் வற்புறுத்துகிறது.
இந்தநூலில் ஏழு முதல் பத்துவரையில்
உள்ள கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள் பெரியபுராணத்தின் ஒப்பற்ற தன்மை, புலப்படும். சிவனடியார்கள் பிறந்த குலம் , குருவின்
மூலமாக முக்தி பெற்றவர்கள், சிவலிங்கத்தினால் முக்தி பெற்றவர்கள், சிவனடியாரால் முக்தி
பெற்றவர்கள், ஆகியோரைப்பற்றி அறிந்து ஆச்சரியப்பட முடியும்.
அக்காலத்தில் ஆதி திராவிடர்கள்
சிவாலயங்களுக்குள் சென்று வழிபடத் தடை இருந்துள்ளது என்பதை நந்தனார் வரலாறு எடுத்துக்
காட்டுகிறது. ஆனால் திருஞானசம்பந்தராகிய வேதியர், அதைப்புறந்தள்ளி விட்டு, தன்னுடைய
தேவாரப் பாடல்களுக்கு இசைகூட்டி யாழ் ஒலி எழுப்புவதற்கு
தாழ்ந்த குடியில் தோன்றிய திருநீலகண்டரைத்தான் வைத்திருக்கிறார். அதோடு மட்டும் அல்ல,அந்த
அன்பரைத் திருக்கோயில் கருவறை வரை அழைத்துச் செல்கிறார்.
தம் இல்லத்தில் படுத்துறங்க இடம்
இல்லாத நிலையில் திருநீல நக்கர் தாம் வேள்வி
செய்த மண்டபத்தில் கணவன் மனைவியாகப் பாணர் தம்பதியர் இரவில் படுத்து உறங்க அனுமதிக்கிறார்.
பெண்மைக்கு பெருமை சேர்ப்பதற்கும், பெண்ணை தெய்வமாக
போற்றுவதற்கும், பெண் நினைத்தால் அரசனையே மனமாற்றம் செய்து நல்வழிப்படுத்தமுடியும்
என்பதற்கும் பெரியபுராணம் சாட்சியாக இருக்கிறது. அந்தக் காலத்திலேயே பெண்மைக்கு
ஏற்றம் தந்தவர் சேக்கிழார். பெரிய புராணத்தில் திலகவதியார், மங்கையர்க்கரசியார்,
மாதினியார், சிறுத்தொண்டரின் மனைவியார், என்று பலதரப்பட்ட பெண்களின் உயர்குணங்கள்
, கற்புநிலை ஆகியவை போற்றப்பட்டுள்ளன.
பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட்டிருந்த
காலத்தில், உலகத்தார் பார்வையில் வாழ்வை இழந்தவராகத் தோற்றம் தந்தவர் திலகவதியார்,
அவர் எதிரே வரக்கூடாது, அவர் முகத்தில் விழிக்கக்கூடாது, என்று மூடநம்பிக்கையோடு மக்கள்
வாழ்ந்த காலத்தில், அவர் திருநீறு வழங்கித் தனது தம்பி திருநாவுக்கரசரை மதமாற்றம் செய்திருக்கிறார். தம்பியை சைவத்திற்கு திரும்ப அழைத்து வந்துள்ளார்.
ஒரு மடாதிபதிக்கு உரிய உரிமையை சேக்கிழார் திலவகதியாருக்கு வழங்கி இருப்பதை இதன் மூலமாக
நாம் அறிய முடிகிறது.