Sunday, June 27, 2021

பெரிய புராணம் முன்னுரை

 நான் எழுதி பாபா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருக்கும் பெரிய புராண நூலின் முன்னுரையில் சிறுபகுதி.

பெரியபுராணம் என்று இந்தநூலுக்கு பெயர் ஏற்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன. இதன் அருமை பெருமைகள் அளவுகடந்தது அதனால் இது பெரிய புராணம் எனப்பட்டது. இதில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு நாயானாருடைய வாழ்க்கை சரிதமும் புராணம் என்ற பெயரோடு காணப்படுகிறது. இவ்வாறு பல புராணங்களை பெற்ற காரணத்தினாலும் இது பெரிய புராணம் என்று போற்றப்படுகிறது. அது மட்டும் அல்ல அன்பிலும், பக்தியிலும், தானம் கொடுப்பதிலும், சிவபூசைசெய்வதிலும் பெரியவர்களான பல மகான்களுடைய சரித்திரத்தை சொல்கின்ற காரணத்தினாலும் இது பெரியபுராணம் என்றுவழங்கப்படுகிறது.

       மற்ற அனைவரும் இறைவனிடம் உலகப்பொருட்களையும்,அழியக்கூடிய செல்வத்தையும் , ஞானமிகுந்த சிலர் மோட்சப்பேற்றையும் கேட்பார்கள். ஆனால் பெரிய புராணத்தில் வரும் நாயன்மார்கள் இறைவனை கும்பிடுவதைத் தவிர வீடு பேறான மோட்சத்தைக் கூட விரும்பாமல் இருந்திருக்கிறார்கள். இது ஆச்சரியமான உண்மை,

இதனை

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்

ஒடும்செம்பொனும் ஒக்கவே நோக்குவார்

கூடும் அன்பினிற் கும்பிடலேயன்றி

வீடும் வேண்டா விறலின் விளங்கினார்      என்று சேக்கிழாரே பாடிஇருப்பதன் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது.

 இவ்வாறு இறைவனைத் தவிர வேறு எதையும் வேண்டாத பெரிய  உள்ளம் கொண்டவர்களது சரித்திரத்தைச் சொல்வதாலும் இதற்கு பெரிய புராணம்  என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் இயற்றிய திருத்தொண்டத்தொகையையும், நம்பியாண்டார் நம்பி பாடியருளிய திருத்தொண்டர் திருவந்தாதியையும், அடிப்படையாகக் கொண்டு சேக்கிழார் சுவாமிகள் இந்தப் பெரிய புராணத்தை மிகவும் விரிவாக சொற்சுவை, பொருட்சுவை, எல்லாவற்றுக்கும் மேலாக பக்திச்சுவை சொட்டச்சொட்டப் பாடி கொடுத்திருக்கிறார்.

       சிவபெருமானுடைய பேரருளைப் பெறுவதற்கு என்ன தகுதி தேவைப்படுகிறது ? மிகப்பெரிய செல்வந்தராக இருக்க வேண்டுமா ? வேதசாஸ்திரங்கள் படித்து அவற்றில் வல்லவராக இருக்க வேண்டுமா ? உயர்பதவி வகிக்க வேண்டுமா ? மன்னராக இருந்தால் தான் மகேசன் அருள் பெறமுடியுமா ? தாழ்ந்த குலத்தில் தோன்றாமல் உயர்குலத்தில் பிறக்க வேண்டுமா?  இறைவனை சாஸ்திரங்கள் கூறும்  முறைப்படிதான் வழிபடவேண்டுமா ? என்ற இது போன்ற இன்னும் ஏராளமான கேள்விகளுக்கு பெரிய புராணம் இல்லை இல்லை இல்லவே இல்லை என்ற பதிலைத்தான் அளிக்கிறது.

முத்தீ வளர்த்து வேள்வி செய்த அந்தணராகிய நீலநக்கர் முதலாக, சட்டி செய்து கொடுப்பதை தொழிலாகக் கொண்ட திருநீலகண்டர் வரை எல்லாத் தொழில்களைச் செய்தவர்களுக்கும் பேதமில்லாமல் இறைவன் அருளை வாரி வழங்கி இருக்கிறான்.

அந்தக் கால சமுதாயம் சாதிப்பிரிவினைகளினால் துண்டாகிக் கிடந்தது. அப்படி பிளவுபட்ட மனிதகுலத்தை சிவபெருமான் மீது கொண்ட அளவற்ற பக்தி என்ற கயிற்றின் மூலமாக  இறுக்கக்கட்டிய நடைமுறை வைத்தியத்தை பெரியபுராணம் மிக அருமையாக தெரிவிக்கிறது.

கழுத்தளவு நீரல் நின்று உருத்திர ஜெபம் செய்து இறைவனது அருளைப் பெற்றவர் உருத்திரபசுபதியார். இது போல எந்தவொரு பூசை ஜெபம் தவம் ஆகியவற்றை பெரிய அளவில் செய்யாமல், அப்பர்பெருமான் மீது அளவில்லாத பக்தி கொண்டு  ,அவரை நேரில் பார்க்காத போதிலும் ,அவர் பெயரால் தண்ணீர்பந்தல் வைத்தும், தானதர்மங்கள் செய்தும் வழிபட்டஅப்பூதி அடிகள் போன்றவர்களும் பெரிய புராணத்தில் உண்டு

      மனித குலத்திற்குத் தொண்டு செய்யும் மனிதர்களும், இறைவனுக்கு இணையாக தெய்வத்தன்மை பெற்ற மனிதர்களும் போற்றி வழிபட வேண்டியவர்கள் என்பதை பெரியபுராணம் வற்புறுத்துகிறது.

இந்தநூலில் ஏழு முதல் பத்துவரையில் உள்ள கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள் பெரியபுராணத்தின் ஒப்பற்ற தன்மை,  புலப்படும். சிவனடியார்கள் பிறந்த குலம் , குருவின் மூலமாக முக்தி பெற்றவர்கள், சிவலிங்கத்தினால் முக்தி பெற்றவர்கள், சிவனடியாரால் முக்தி பெற்றவர்கள், ஆகியோரைப்பற்றி அறிந்து ஆச்சரியப்பட முடியும்.

அக்காலத்தில் ஆதி திராவிடர்கள் சிவாலயங்களுக்குள் சென்று வழிபடத் தடை இருந்துள்ளது என்பதை நந்தனார் வரலாறு எடுத்துக் காட்டுகிறது. ஆனால் திருஞானசம்பந்தராகிய வேதியர், அதைப்புறந்தள்ளி விட்டு, தன்னுடைய  தேவாரப் பாடல்களுக்கு இசைகூட்டி யாழ் ஒலி எழுப்புவதற்கு தாழ்ந்த குடியில் தோன்றிய திருநீலகண்டரைத்தான் வைத்திருக்கிறார். அதோடு மட்டும் அல்ல,அந்த அன்பரைத் திருக்கோயில் கருவறை வரை அழைத்துச் செல்கிறார்.

தம் இல்லத்தில் படுத்துறங்க இடம் இல்லாத நிலையில் திருநீல நக்கர் தாம்  வேள்வி செய்த மண்டபத்தில் கணவன் மனைவியாகப் பாணர் தம்பதியர் இரவில் படுத்து உறங்க அனுமதிக்கிறார்.    

பெண்மைக்கு பெருமை சேர்ப்பதற்கும், பெண்ணை தெய்வமாக போற்றுவதற்கும், பெண் நினைத்தால் அரசனையே மனமாற்றம் செய்து நல்வழிப்படுத்தமுடியும் என்பதற்கும் பெரியபுராணம் சாட்சியாக இருக்கிறது. அந்தக் காலத்திலேயே பெண்மைக்கு ஏற்றம் தந்தவர் சேக்கிழார். பெரிய புராணத்தில் திலகவதியார், மங்கையர்க்கரசியார், மாதினியார், சிறுத்தொண்டரின் மனைவியார், என்று பலதரப்பட்ட பெண்களின் உயர்குணங்கள் , கற்புநிலை ஆகியவை போற்றப்பட்டுள்ளன.

பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட்டிருந்த காலத்தில், உலகத்தார் பார்வையில் வாழ்வை இழந்தவராகத் தோற்றம் தந்தவர் திலகவதியார், அவர் எதிரே வரக்கூடாது, அவர் முகத்தில் விழிக்கக்கூடாது, என்று மூடநம்பிக்கையோடு மக்கள் வாழ்ந்த காலத்தில், அவர் திருநீறு வழங்கித் தனது தம்பி திருநாவுக்கரசரை மதமாற்றம் செய்திருக்கிறார்.  தம்பியை சைவத்திற்கு திரும்ப அழைத்து வந்துள்ளார். ஒரு மடாதிபதிக்கு உரிய உரிமையை சேக்கிழார் திலவகதியாருக்கு வழங்கி இருப்பதை இதன் மூலமாக நாம் அறிய முடிகிறது.

Saturday, June 26, 2021

ஊனுக்குள் ஒளிந்த ஈசன்

 


சி்த்தர்கள் பதினெண் சித்தர்கள் என்றும், நவகோடி சித்தர்கள் என்றும் பலவகையான தொகுப்பாகக் காணப்படுகின்றனர். அவர்கள்அனைவருமே இந்தியாவில் பல இடங்களிலும் பரவலாக இருந்து ஆன்மீகத்தை வளர்த்து இருக்கிறார்கள். பொதுவாக பார்க்கும் போது சித்தர்கள் கடவுள் எதிர்ப்புக் கொள்கையை ஆதரிப்பவர்களைப் போல தோன்றுவது இயல்பு. இதற்கு உதாரணமாக ,

கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா   என்பதையும்

நட்டகல்லை சுற்றிவந்து நாலுபுட்பம் சாத்தியே

சுற்றிநின்று மொணன்று சொல்லுமந்திரம் ஏதடா

நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சட்டிசுட்ட சட்டுவம் கறிச்சுவை அறியுமோ  என்ற பாடலையும் சான்றாகக் காட்டுவார்கள்.

சித்தர்கள் போலிச் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் எதிர்த்தார்களேதவிர கடவுளை மறுக்கவில்லை. வெறும் கல்லில் மட்டுமே கடவுள் இருக்கிறார் என்று சொல்லி ஊரை ஏமாற்றும் போலிகளையே அவர்கள் சாடினார்கள். மக்களுக்கு நல்லறிவை புகட்டினார்கள். உண்மையான தெய்வம் மனத்தில் இருக்கிறது என்றுஉபதேசம் செய்தார்கள். 

“தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?

வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!

தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்

ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!

இவ்வுடம்பு வெறுத்து ஒதுக்கத்தக்க ஒரு பொருள் என்று முதலில் தாம் எண்ணியதாகவும் பின்பு உடம்புக்குள்ளே தன்னை உயர்நிலைக்கு உயர்த்தும் பரம் பொருளைக் கண்டு கொண்டேன்.அதன் பிறகு தான் தம் உடம்பைப் பேணிக் காப்பதாகவும்  திருமூலர் குறிப்பிடுகிறார்.

தேனுக்குள் இருக்கின்ற இனிப்பு, சிவப்பு நிறமா அல்லது கருப்பு நிறமா என்ற ஆராய்ச்சி  பயன் அற்றதோ அதனைப் போன்றதே இறைவனைப் புற உலகப் பொருட்களில் தேடுவதாகும். தேனுக்குள் இருக்கின்ற இன்பம் செறிவுற்று இருப்பதனை அதனை அருந்தியவர்களால் மட்டுமே அறிய முடியும்.

அது போன்று உடம்பினுக்குள்ளே உயிரில் கலந்திருக்கின்ற இறைவனை நுகர்ச்சியினாலேயே உணர முடியும் என்பதனைத், “தேனுக்குள் இன்பம் சிவப்போ கருப்போ, பாருக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர், தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல், ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே என்று தெரிவிக்கிறார் திருமூலர்.

நான்முகனும் நாராயணனும் தங்கள் முற்சியால் இறைவனைத் தேடிக் கண்டுவிட முடியும் என்று முன்னொரு காலத்தில் பலயுகங்கள் முயன்று தோல்வியுற்றனர். எனினும் அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையான அப்பெருமானை என் அன்பினால் என் உடலுக்குள்ளே தேடிக்கண்டேன் என்பதனைத்,

 “தேடிக்கண்டு கொண்டேன் திருமாலொடு நான்முகனும் தேடி தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன்

என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுகின்றார்.  இறைவனை வெளியே தேடாதே, உள்ளே தேடு என்று இதைத்தான் நமது சித்தர்களும் சற்று கடினமான வார்த்தைகளில் குறிப்பிட்டனர். பதினெண் சித்தர்களில் பெரும்பாலோர்  பிரசித்தி பெற்ற கோயில்களில் சமாதி கொண்டிருக்கிறார்கள். சில சித்தர்கள் சிவத்துடனே இரண்டறக் கலந்து அந்தக் கோயில்களில் அருள்பாலித்து வருகிறார்கள். சில சித்தர்கள் தனித்தனியாக ஜீவசமாதிகளில் தரிசனம் தருகிறார்கள்.

Friday, June 25, 2021

திருக்குறளும் சங்கப்பலகையும்

 

அதிகாரம் -  கல்லாமை – கல்வியைக் கற்காமல் போனால் ஏற்படும் இழிவும், அதைக் கற்பதால் உண்டாகும் புகழும்.

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் , கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு

கல்வி அறிவு இல்லாதவர்கள் சாதியால், செல்வத்தினால் மேலான பிறப்பை உடையவர்களாக இருந்தபோதிலும் , சாதியால், செல்வத்தினால் கீழ் நிலையில் உள்ள படித்து அறிந்த அறிஞர்களைப் போல பெருமை அடைய மாட்டார்கள்.

இதில் இருந்து கல்வி கற்றுவிட்டால் அது எல்லா வகையான உயர்வையும் கொடுத்து விடும் என்பதை அறிய முடிகிறது. ஐயன் திருவள்ளுவர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி இந்த உண்மையை நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்குகிறது. புலவர் புராணம் என்ற நூல் இந்தக் கதையை சொல்கிறது.

சென்னையை அடுத்த மயிலாப்பூரி்ல் நெசவுத் தொழிலி்ல் ஈடுபட்டு உழைத்துச் சம்பாதித்து வந்த திருவள்ளுவர் என்னும் தெய்வப்புலவர் தனது வாழ்க்கையின் அனுபவங்களைத் தொகுத்து அறநூலாகிய திருக்குறளை இயற்றினார்.

அந்தக் காலத்தி்ல் மதுரையில் தமிழ்ச்சங்கம் ஒன்று இருந்தது. அதி்ல் இருந்த சங்கப்புலவர்கள் பலரும் தமிழ்ப்பயிரை வளர்த்து பெருமை பெற்றவர்கள். வள்ளுவர் தமது திருக்குறளை சங்கப்புலவர்களிடம் சென்று அரங்கேற்றம் செய்து அங்கீகாரம் பெற விரும்பினார்.

திருவள்ளுவர் மதுரை சென்று சங்கப்புலவர்களை சந்தித்து தமது விருப்பத்தைத் தெரிவித்தார். அவர்கள் நெசவுத் தொழில் செய்யும் இந்த புலவன் என்ன பெரிதாக எழுதி இருக்கப்போகிறான் ? என்ற அலட்சியத்தோடு இருந்தனர். அதோடு தாழ்ந்த குலத்தி்ல் பி்றந்த வள்ளுவரை அவர்கள் சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய அனுமதிக்க மறுத்தனர்.

அவர்களைப் பார்த்து திருவள்ளுவர் மிகுந்த மரியாதையோடு, சங்கப் புலவர்களே !நீங்கள் தமிழாராய்ச்சி செய்வதற்குப் பதிலாக எனது குலத்தையும் தொழிலையும் ஆராய்ச்சி செய்வது நியாயமானது அல்ல. எனது நூலைக் குறித்து உங்கள் கருத்தை அறியவே நான் வந்திருக்கிறேன் என்றார்.

அதைக்  கேட்ட புலவர்கள் கடவுள் அருளிய சங்கப்பலகை எங்களுக்குத் துணை புரிகிறது. அந்தப் பலகை எந்த நூலை ஏற்றுக் கொள்கிறதோ அதை மட்டுமே ஏற்பது எங்கள் வழக்கம் என்றனர்.

உடனே வள்ளுவர் சரி அப்படியே ஆகட்டும், நீங்கள் அனைவரும் சங்கப்பலகையில் அமர்ந்த பிறகு, நான் எழுதிய இந்த திருக்குறள் ஏட்டுச் சுவடிகளையும் அதில் வைப்பதற்கு சிறிது இடம் கொடுங்கள். அந்தப் பொற்பலகை அனுமதிக்குமானால் பிறகு ஆராய்ச்சி செய்து உங்களது மேலான கருத்துக்களைத் தெரிவியுங்கள் .அது அங்கீகாரம் செய்யாமல் போனால் என் நூல் குறை உடையது என்பதை நானே அறிந்து விலகிக் கொள்கிறேன் என்றார்.

புலவர்கள் இதற்குச் சம்மதித்தனர். அவர்கள் அனைவரும் சங்கப்பலகையில் அமர்ந்தனர். பிறகு வள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஏட்டுச் சுவடி பொற்பலகையில் வைக்கப்பட்டது. உடனே தெய்வப்பலகை, மிகச் சிறிய அளவிற்கு சுருங்கியது. இதனால் சங்கப்புலவர்கள் அனைவரும் தொபீர் என்று பொற்றாமரைப் பொய்கையில் விழுந்தனர். அவர்களுக்கு இடம் தராத சங்கப்பொற்பலகை , தன் மீது திருக்குறளை மாத்தி்ரம் ஏந்திக் கொண்டு  மிதந்தது. அவமானம் தாங்க முடியாத சங்கப்புலவர்கள் தண்ணீரில் விழுந்து நனைந்த உடைகளோடு நீந்தி வந்து கரையேறினார்கள்.

பிறகு அவர்கள் வேறு உடை அணிந்து வந்து திருக்குறளை ஆராய்ச்சி செய்தனர். தமிழ்தெய்வமே ஒப்புக் கொண்டதை சங்கப்பலகை தெரிவித்த பிறகு வேறு என்ன சொல்ல வேண்டியிருக்கிறது ? அந்தப் புலவர்கள் பொறாமை இல்லாமல் நூலை ஆராய்ந்து அதில் உள்ள கருத்துக்களையும், யாவருக்கும் எக்காலத்திற்கும் பொருந்துகின்ற நீதிகளையும் படித்து கேட்டு அளவில்லாத ஆனந்தம் கொண்டனர். உச்சிமீது வைத்துக் கொண்டாடினர்.

திருக்குறள் எங்கள் தலைக்கனத்தைப் போக்கிவிட்டது, வள்ளுவர் செய்த முப்பால் எங்களுக்கு நல்லறிவைத் தந்து விட்டது, இனிமேல் நாங்கள் முன்னர்போல சங்கப்பலகையில் அமர்ந்து தழிழ் ஆராய்ச்சி செய்வது தகாது என்று சொல்லி திருவள்ளுவரையும் அவர் இயற்றிய திருக்குறளையும்  வாயார மனதாரப்  போற்றினர்.

வள்ளுவரைப் பார்த்து எங்களை மன்னித்து விடுங்கள் என்று வேண்டினர். அங்கிருந்த அத்தனை புலவர்களும் திருக்குறளைப் புகழ்ந்து பாமாலை சூட்டினர். அந்தப் பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவமாலை என்று அழைக்கப்படுகிறது. வள்ளுவர் பூசனை, மற்றும் வானளாவிய புகழ் ஆகியவற்றோடு திருமயிலைக்கு வந்து சேர்ந்தார். ஆதலால் ஒருவன் இழிந்த குலத்தில் பிறந்தாலும், கல்வி மாத்திரம் இருக்குமானால் உலகத்தி்ல் உள்ள கல்வி கற்றவர்கள் அவனைப் போற்றுவது உறுதி.