Tuesday, November 1, 2011

சித்தர்களின் அற்புத சக்தி

கூடுவிட்டு கூடு பாய்தல்

போகர் சீனநாட்டிற்குச் செல்வதற்கு முன்னால் கொங்கணவர், கருவுரூரார், இடைக்காடர், சட்டைமுனி போன்ற சீடர்களோடு இருந்தார் என்று சொல்வார்கள். போகமுனிவர் சீனநாட்டில் போ-யாங் என்பவரது சீன உடலில் கூடு விட்டு கூடு பாய்ந்தார். சீனநாட்டிலேயே சீனராக வாழ்க்கை நடத்தி வந்தார். இவரை புலிப்பாணி என்பவரே தமிழகத்திற்கு அழைத்து வந்;தார் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.

பழனியில் போகர் இருந்தபோது ஒரு நாள் அவரது எதிரில் ஒளிபிழம்பு தோன்றியது, அந்த ஒளியில் முருகப்பெருமான் காட்சி அளித்தார் நீ என்னை காணுவது போல மற்றவர்களும் கண்டு தரிசித்து பிறவிப்பயனைப் பெறுவதற்காக ஒரு கோவிலை ஏற்படுத்து, அதில் நவபாஷாணத் திருவுருவத்தை பிரதிஷ்டை செய் என்று கூறி மறைந்து விட்டார்.

முருகன் அருள் செய்தபடியே போகர் கோயிலை உருவாக்கி, அதில் நவபாஷாணங்களை தகுந்த விதத்தில் சேர்த்து முருகன் திருவுருவச் சிலை ஒன்றை வடித்து எடுத்து, அதற்கு அபிஷேகம் செய்தார். விபூதியை தனது உடம்பு முழுவதும் பூசிக்கொண்டார், பஞ்சாமிர்தத்தை அமுதமாக எண்ணி உண்டார். இவை இரண்டும் அவருக்கு அளவில்லாத ஆற்றலையும், உள்ளொளியையும் பெருக்கியது.

தனது சீடர் புலிப்பாணியை அழைத்தார், நான் மூலிகை சேகரிக்கப் போகிறேன் என்று தெரிவித்துவிட்டு ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்றார். சீன தேசம் அடைந்த அவர் பெண்களில் அழகால் கவரப்பட்டு அங்கே சில காலம் தங்கியதாகக் கூறுகின்றனர். இது எந்த் அளவிற்கு உண்மை என்பது புரியவில்லை. ஐம்புலன்களை வென்ற சித்தருக்கு பெண்பித்து பிடித்ததாகக் காட்டுவது எதைக்கருதி என்பது விளங்கவில்லை. அவர் சீன தேசத்திற்கு சென்றதற்கு இதை விடச்சிறந்த காரணங்கள் இருக்கலாம், ஆனாலும் பாமர மக்கள் தங்களுக்குத் தோன்றிய விஷயங்களையே சேர்த்து கதை திரிப்பது வழக்கம். அந்த வழக்கப்படி அவர் பெண்ணாசை கொண்டு சீனாவில் தங்கியதாக பழங்கதைகள் சொல்கின்றன.

ஆண்டு பல கழிந்தன, தன்னுடைய குரு போகர் தமிழகத்திற்கு திரும்பிவராததால் புலிப்பாணி மனம் வருந்தினார். வேறு ஒருவரை பழனி முருகப்பெருமானுக்கு பூசை செய்யப்பணித்துவிட்டு போகரைத் தேடி இவரும் ஆகாயமார்க்கமாகச்சென்றார். சீன தேசத்தில் தவசக்தி முழுவதையும் இழந்த நிலையில் போகரைக் கண்டார், மனம் வருந்தினார். தன்னுடைய குருவின் நிலைகண்டு உள்ளம் பதைத்தார், ஐயா வாருங்கள் இருவரும் இப்போதே தமிழகம் சென்று விடுவோம் என்றார்.

புலிப்பாணி என் ;தவ வலிமை அத்தனையும் இழந்து விட்டேன், இனிமேல் என்னிடம் ஆகாயமார்க்கமாக பயணம் செய்யும் ஆற்றல் இல்லை என்று தன் நிலையை விளக்கினார் போகர்.

குருவே கவலை வேண்டாம் நான் தங்களை என் முதுகின் மீது ஏற்றிக்கொண்டு பறந்து செல்கிறேன் என்ற புலிப்பாணி , போகரை முதுகில் சுமந்து கொண்டு வான்வழியாக தமிழகம் வந்து சேர்ந்தார்.

புலிப்பாணி தனது குருநாதரான போகர் பழைய நிலையை அடையவும், இழந்த தவஆற்றலை திரும்பப்பெறவும் பெரிதும் உதவி செய்தார். நெடுங்காலம் தவம் செய்த போகர் தன் பழைய ஆற்றல்கள்அனைத்தையும் திரும்பப்பெற்றார். பழனியில்; சிலகாலம் வாழ்ந்த அவர் அங்கேயே சமாதி அடைந்தார் என்று நூல்கள்தெரிவிக்கின்றன. அவரது சமாதி பழனி ஆண்டவர் கோயிலின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் இருக்கிறது.

No comments:

Post a Comment